ட்ரக்கில் உணவு தயாரித்து விற்பனை செய்யும் பெண்ணுக்கு முதலீடு செய்ய முன்வந்துள்ள ஆனந்த் மஹிந்திரா!
மஹிந்திரா குரூப்பின் தலைவர் மற்றும் சிஇஓ-வான ஆனந்த் மஹிந்திரா ஒரு கொடையாளி. முதலீட்டாளர். இரக்ககுணமுள்ளவர். புதிய வணிக முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு பண உதவி செய்து அவர்களை ஊக்குவிப்பவர். 34-வயதான ஷில்பா மங்களூருவில் ட்ரக்கில் உணவு தயாரித்து விற்பனை செய்யும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளார். இவரது வணிகத்திற்கு முதலீடு செய்ய முன்வந்துள்ளார் ஆனந்த் மஹிந்திரா.
தனியாக தனது குழந்தையை வளர்த்து வரும் ஷில்பா, ஒரு மஹிந்திரா பொலேரோ வாகனம் வைத்திருந்தார். அதை உணவு வணிகத்திற்கு ஏற்ற ட்ரக்காக மாற்றியமைத்தார். அவரது பகுதியில் வட கர்நாடக உணவு வகைகளுக்கு பிரபலமானவர் ஷில்பா. 2015-ம் ஆண்டு கடன் முறையில் இந்த வாகனத்தை வாங்கி அவரது சகோதரருடன் இணைந்து உடனடியாக வணிகத்தில் ஈடுபட்டார்.
’தி நியூஸ் மினிட்’ உடனான உரையாடலில் ஷில்பா கூறும்போது,
”தொழில்முனைவராக வேண்டும் என்று தீர்மானித்து நான் வணிகத்தில் ஈடுபடவில்லை. என்னுடைய சூழல்தான் என்னை தொழில்முனைவராக்கியது. என்னுடைய முயற்சிக்கு சுற்றியுள்ளவர்கள் ஆதரித்தனர். அதனால் என்னால் தொடர்ந்து செயல்படமுடிந்தது.”
ஆனந்த் மஹிந்திரா டிவிட்டர் வாயிலாக ஷில்பாவின் வணிகத்திற்கு முதலீடு செய்வதில் விருப்பம் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஷில்பா ஒரு வெற்றிகரமான தொழில்முனைவர் ஆகவேண்டும் என்று தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு அவரது வணிகம் விரிவடையவே முதலீடு வழங்க விரும்புவதாகவும் ஷில்பாவிற்கு அவரது நன்கொடை தேவைப்படாது என்றும் குறிப்பிட்டார். அவர் கூறியதாவது,
”இது ஒரு சிறப்பான தொழில்முனைவுக் கதை. மஹிந்திராவில் இதை வளர்ச்சிக் கதை என்று சொல்வோம். இந்த வளர்ச்சிக் கதையில் போலெரோ ஒரு சிறு பங்கு வகித்தது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். ஷில்பா இரண்டாவது அவுட்லெட்டை துவங்க திட்டமிடுவதால் அவரது அடுத்தகட்ட வளர்ச்சிக்கு தனிப்பட்ட முறையில் முதலீடு செய்ய விரும்புகிறேன் என்பதை அவரிடம் தெரிவிக்கவும். என்னுடைய நன்கொடை அவருக்கு தேவைப்படாது என்று நினைக்கிறேன் ஏனெனில் அவர் ஒரு வெற்றிகரமான தொழில்முனைவர். அவரது வணிகத்தின் விரிவாக்கப் பணிகளுக்காகவே முதலீடு செய்ய விரும்புகிறேன்.”
கட்டுரை : Think Change India